Monday, July 30, 2018
Saturday, July 28, 2018
முன்னேஸ்வரம் திருக்கோவில் பற்றிய அதிசயிக்க வைக்கும் ஆலய வரலாறு …
முன்னேஸ்வரம் திருக்கோவில்
இராமாயண காலத்தில், ஸ்ரீ இராம பிரான் இலங்கைத் தீவு வந்து இராவணனை எதிர்த்துப் போரிட்டு வெற்றிகண்டு, தனது மனைவி சீதா பிராட்டியை மீட்டுக்கொண்டதும், அவ் வெற்றிக்காக நன்றி தெரிவிக்க சிவபெருமானை இத்திருத்தலத்தில் வழிபட்டார் என்று கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன.
முன்னேஸ்வரம் திருக்கோயில், இலங்கைத்தீவின் மேற்குக் கரையோரத்தில், புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத் திருக்கோயில் முதன்முதலில் எப்போது, யாரால் கட்டப்பட்டது என்பது சர்ச்சைக்குரியதொரு விடயமாக உள்ளது.
ஆனால், இத் திருக்கோயில் இரண்டுமுறை சமய விரோதிகளால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது என்பது யாவரும் அறிந்த உண்மையாக உள்ளது.
பண்டைய சில கல்வெட்டுகளின்படி, சோழ மன்னன் குளக்கோட்டன், கோட்டை சிங்கள மன்னர்களான ஆறாவது பராக்கிரமபாகு, ஒன்பதாம் பராக்கிரமபாகு ஆகியோர் இத்திருக்கொயிளைச் சிறப்பித்துக் கட்டித் திருப்பணிகள் செய்ததாகவும், இக்கோயிலின் தாபரிப்புக்காக ஏராளமான வயல் நிலங்களை எழுதிவைத்ததாகவும் தெரிய வருகின்றது.
முன்னேஸ்வரம் திருக்கோயில் வளாகத்தில் நாம் பிரதான திருக்கோயிலான ஈஸ்வரன் கோயிலுடன் சேர்த்து, அதனைச் சுற்றி மேலும் பல சிறிய கோயில்களைக் காணக்கூடியதாக உள்ளது.
பிரதான திருக்கோயிலில் ஸ்ரீ முன்னைநாதப் பெருமான் என்னும் திருப்பெயருடன் சிவபெருமான் அழகும் கம்பீரமும் ஒருங்கே கொண்ட உயர்ந்த லிங்க வடிவில் காட்சியளிக்கின்றார்.
அவருக்கருகில், ஸ்ரீ வடிவாம்பிகா தேவி என்னும் திருப்பெயருடன் அன்னை பார்வதி தேவி காட்சியளிக்கின்றார்.
கோயில் வளாகத்தின் தென்கிழக்கு பகுதியில் விநாயகரும், வட கிழக்குப் பகுதியில் ஐயனாரும், வட பகுதியில் காளி தேவியும் சிறு திருக்கோயில்களில் அழகுமிகு தரிசனம் தருகின்றார்கள். திருக்கோயிலினுள்ளே, தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவ மூர்த்தி, அம்மன் ஆகிய தெய்வங்களின் திருவுருவங்களுடன், நவக்கிரகங்களும், அறுபத்துமூன்று நாயன்மார்களும் காட்சியளிக்கின்றார்கள்.

கோயிலின் எதிரே அழகும் விசாலமும் உடைய தீர்த்தக்குளமும், அதன் அருகே ஸ்தல விருட்சமான அரச மரமும் காட்சியளிக்கின்றன.
முன்னேஸ்வரம் திருக்கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளையும் ஒருங்கே கொண்டதாக விளங்குகின்றது.
வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே தனிச் சிறப்பும், அருட்பெருக்கும் நிறைந்து விளங்கிய இத் திருக்கோயில் ஏனைய ஈழத்துத் திருக் கோயில்களைப்போலவே இலங்கைத் தீவைக் கைப்பற்றிய அன்னியரான போர்த்துக்கேயரால் 1517 ஆம் ஆண்டில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

ஆயினும், இத்திருக்கோயிலின் பக்தர்களின் முயற்சியால், தெய்வ விக்கிரகங்கள் அன்னியரின் கைகளில் அகப்படாமல் பாதுகாக்கப்பட்டன.
போர்த்துக்கேயரின் ஆட்சி மறைந்து ஆங்கிலேயர்களின் ஆட்சி அமைந்தபின்னர் பல வருடங்களுக்குப்பின்னர், ஈழத்துச் சிவபக்தர்களின் தணியாத முயற்சியின் பயனாக முன்னேஸ்வரம் திருக்கோயில் சிவாகம விதிகளுக்கும், தென் இந்திய சிற்ப முறைகளுக்கும் இணங்க மீண்டும் நிர்மாணிக்கப்பட்டு, முந்தைய திருவுருவச் சிலைகள் யாவும் மீண்டும் அவற்றுக்கேயுரிய இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டு, கும்பாபிஷேகமும் 1753 ஆம் ஆண்டில் வெகு சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.

தற்போது, முன்னேஸ்வரம் திருக்கோயில் இலங்கையின் பிரதான சிவன் திருக்கோயில்களுள் ஒன்றாக விளங்குகின்றது.
மேலும், புத்தளம் மாவட்டத்திலும் அதனைச் சூழ்ந்துள்ள பிரதேசங்களிலும், தமிழ் இந்து மக்களுடன் சேர்ந்து சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருவதனால், இத் திருக்கோயில் தற்போது அனைத்து சமய மக்களும் சாதி, மத, இன பேதமின்றி இறைவனை வழிபடும் ஒரு சிறந்த வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது.
அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவதுடன், இத்திருக்கோயிலின் திருவிழாக்களில் முழுமையான ஈடுபாட்டுடன் கலந்து கொள்கின்றார்கள். சிங்கள மக்கள் காளி தேவியை மிகுந்த பக்தியுடன் வழிபடுவதையும், விரதங்கள் இருந்து அம்மனை வணங்குவதையும் சாதாரணமாகக் காணக்கூடியதாக உள்ளது.

நவராத்திரி, சிவராத்திரி ஆகிய இரு பண்டிகைகளும் இத் திருக்கோயிலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு வருடமும் ஆவணி – புரட்டாசி மாதங்களில், தொடர்ந்து 28 நாட்கள் இத்திருக்கோயில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்திருக் கோயிலைச் சுற்றியுள்ள மருதங்குளம், உடப்பு முதலிய பல கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்று சேர்ந்து, ஒவ்வொரு நாளும் ஒரு கிராமமாக இத் திருவிழாவை வெகு சிறப்பாகவும், பக்தி சிரத்தையுடனும் கொண்டாடுகின்றார்கள். திருவிழாவின் இறுதியில் ஸ்ரீ முன்னைநாதப் பெருமானும், ஸ்ரீ வடிவாம்பிகா தேவி அம்மையும் கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தமது பக்தர்களுக்கு அருள் பாலிக்க, திருவிழா இனிதே நிறைவு பெறுகின்றது.
Thursday, July 26, 2018
உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் கைலாயம்? - மர்மங்களும் விளக்கங்களும்
மும்மூர்த்திகளில் ப்ரம்ம தேவனின் இருப்பிடம் சத்யலோகம். விஷ்ணுவின் இருப்பிடம் வைகுண்டம். சிவனின் இருப்பிடம் கைலாயம் என்று கூறப்படுகிறது.
இந்த மூன்று இருப்பிடங்களில் சத்யலோகமும் வைகுண்டமும் சாதாரண மனிதர்களின் கண்ணுக்கு தெரிவதில்லை.
ஆனால் நமது கண்களால் கண்டு தரிசனம் பெற்று முக்தி அடையும் வகையில் சிவனின் இருப்பிடமான கைலாயம் அமைந்துள்ளது.

உலகின் தலைசிறந்த சிகரங்களில் இமயமலையும் ஒன்று. உலகிலேயே உயர்ந்த சிகரமான இமயமலையில் வடக்கு பகுதியில் எம்பெருமான் சிவன் தன் மனைவி பார்வதியுடன் வசித்து வருவதாக புராணங்கள் கூறுகின்றன.
இதில் கைலாயம் என்பது சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத் நாட்டில் அமைய பெற்று இருக்கிறது.
சிந்து சட்லெஜ் பிரம்மபுத்திரா போன்ற பல நதிகள் இந்த கைலாயத்தில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. இந்த கைலாயம் 6638 மீட்டர் உயரம் கொண்டுள்ளது.

இங்கு வரும் அனைவரும் வணங்கும் மானசரோவர் ஏரியை ப்ரம்ம தேவர் அவரது கைகளால் உருவாக்கியதாக கூறப்படுகிறது.
உலகின் மிக உயரத்தில் இருக்கும் நன்னீர் ஏரி மானசரோவர் மட்டுமே. வேறு எங்கும் இது போன்ற ஏரிகள் இல்லை.
அழிந்து போனதாக சொல்லப்படும் அன்னப்பறவைகள் இன்னமும் இங்கு வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் தெய்வங்களும் தேவர்களும் கின்னரர்களும் யக்ஷர்களும் வந்து நீராடும் இடமாக மானசரோவர் ஏரி விளங்குகிறது.
இதன் காரணமாகவே இங்கு நீராடியபின் கைலாயத்தை தரிசித்தால் முக்தி என்று மக்கள் நம்புகின்றனர்.

52கிமி சுற்றளவு கொண்ட கைலாய மலையை பரிக்கிரமமாக சுற்றி வரும் போது சுகு , ஜெய்தி எனும் இரு இடங்களில் கைலாய மலையின் பிம்பம் மானசரோவர் ஏரியில் விழுவதை பார்க்க முடியும்.
மிகவும் அரிய இந்த இடங்களை சிவனும் பார்வதியும் சேர்ந்து காட்சியளிக்கும் இடமாக மக்கள் வழிபடுகிறார்கள். கௌரிசங்கர் என்று இதற்கு பெயரும் வைத்திருக்கிறார்கள்.

தேவியின் 51 சக்தி பீடங்களில் மானசரோவர் தான் சதி தேவியின் வலது உள்ளங்கை விழுந்ததாக கூறப்படுகிறது.
மானஸரோவருக்கு வெகு அருகிலேயே ராட்சத தலம் என்று இன்னொரு ஏரியும் உண்டு. ராவணன் தவம் செய்த இந்த ஏரி உப்பு நீர் தன்மை கொண்டுள்ளது.
தெளிந்த பளிங்கு நீர் போல மானசரோவர் அமைதியாக இருக்கிறது. ராட்சத ஏரியோ ஆரவாரம் கொண்ட அலைகளை கொண்டு கொந்தளிப்பாகவே காட்சியளிக்கிறது.
அதே போல மானஸரோவரில் வலம் வரும் பறவைகள் எதுவும் ராட்சத தல ஏரிக்கு வருவதில்லை.
சிவபெருமானும் பார்வதி தேவியும் வாழும் இந்த கைலாயத்தில் மற்ற தேவர்கள் முனிவர்கள் சித்தர்கள் கின்னரர்கள் ரிஷிகள் போன்றோரும் வாழ்கின்றனர். அவர்களுக்கான மாளிகைகள் குகைகள் ஆகியவை கைலாய மலையில்தான் ரகசியமாக இருக்கிறது.

சில சமயங்களில் இரவு நேரங்களில் மினுமினுக்கும் வகையில் இந்த இடங்கள் தங்களை வெளிக்காட்டி கொள்ளும் என்று கூறப்படுகிறது.
எட்டாயிரம் மீட்டருக்கும் மேல் உயரம் கொண்ட எவெரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களால் கூட 7000 மீட்டர் உயரம் கொண்ட இந்த கைலாயத்தில் ஏற முடியவில்லை.

தப்பி தவறி யாரேனும் ஏறினாலும் அவர்கள் வழி தவறி விடுகின்றனர் என்கிற அமானுஷ்ய ரகசியங்கள் கொண்டது கைலாயமலை.
இந்துக்கள் மட்டுமல்லாமல் புத்தம் சமணம் பொம்பா போன்ற மற்ற மதத்தினரும் கைலாய மலையை கடவுளாக பார்க்கின்றனர்.
சாட்டிலைட் மூலம் கைலாயத்தை புகைப்படம் எடுத்த போது மிக பெரிய ஆவுடையாருடன் கூடிய லிங்க ரூபமாக கைலாய மலை காட்சியளிப்பது கடவுளை நேசிக்காதவருக்கும் வியப்பை தருகிறது.

பிரபஞ்சத்தின் மைய பகுதியில் இருக்கும் கைலாயம் இந்துக்கள் நம்பிக்கை படி அவர்களுக்கு தந்தையாகிறது. மானசரோவர் ஏரி தாயாகிறது.
காலங்கள் ஸ்தம்பித்து போகும் குகைகள் கைலாயத்தின் அடியில் ஏராளமாக இருக்கிறது என்றும் இங்குதான் மகா அவதார் பாபாஜி மற்றும் எண்ணற்ற சித்தர்கள் வசிப்பதாகவும் நம்பப்படுகிறது.

இங்கு வருகை தரும் பக்கதர்களின் நகங்களும் முடிகளும் 12 மணி நேரத்தில் வளர்கின்றன என்கிறார்கள். இதன் மூலம் கைலாயத்தில் காலம் வேகமாக நகர்கிறது என்று அனைவரும் புரிந்து கொள்ளலாம்.
சூரியனின் கதிர்களால் பொன்னிறமாக ஜொலிக்கும் இந்த கைலாயம் இன்னும் எவ்வளவோ அதிசயங்களையம் அமானுஷ்யங்களையும் தன்னிடம் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே இறைவனால் வெளிப்பட்ட அதிசயங்கள் இன்னமும் முடிவின்றி மனித மூளைகளால் ஆராயப்பட்டுக்கொண்டே இருக்கும்போது வெளிவராத கைலாயத்தின் ஆச்சர்யங்கள் எதற்காகவோ அமைதியாக காத்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.
Wednesday, July 25, 2018
அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் பற்றிய ஓர் சிறப்பு பார்வை
வடமராட்சியில் “அல்வாய்” என்னும் பதியில் “வேவிலந்தை” என்னுமிடத்தில் இக் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலின் தோற்றம் பற்றிய கர்ணபரம்பரைக் கதை மூலம் வீரமாப்பாணர் பரம்பரையிலே வந்த “உடைச்சி” என அழைக்கப்படும் “வள்ளி நாச்சி” என்ற பெண் வழிபட்ட தலமென்பது கூறப்படுகிறது. சக்தி வழிபாட்டில் ஈடுபாடு கொண்டிருந்த உடைச்சி ஆண்டு தோறும் மதுரைக்குச் சென்று மீனாட்சியைத் தரிசிக்கும் வழக்கமுடையவராக இருந்தார். ஒருமுறை சென்ற போது மதுரைக் கடை வீதியில் ஓர் அழகான அம்மன் சிலையையும் வாங்கி வந்தார்.
அக்காலத்தில் வெப்பு நோய்களை அம்மன் வியாதி என அழைத்தனர். அம்மை, சின்னமுத்து, கொப்பளிப்பான் போன்ற வியாதிகள் வந்தால் அம்மனுக்கு நேர்த்தி வைக்கும் வழக்கம் இருந்தது. “மாரி பெய்து இந்நோய்களையெல்லாம் தீர்க்கவேண்டும் தாயே” எனத்தன் நாற்சார வீட்டின் தூய்மையான இடத்தில் அம்மன் சிலையை வைத்து விளக்கேற்றி பூப்போட்டு உடைச்சி வழிபட்டுவந்தார்.
ஒரு நாள் அம்மன் அவருடைய கனவிலே தோன்றி வேம்பும் இலந்தையும் பின்னிப்படர்ந்திருக்கும் இடத்தில் தன்னை வைத்து வழிபடும்படி சொன்னாள். கனவுக் கதை ஊரெல்லாம் பரவி வேவிலந்தைக் காணியில் ஒரு கொட்டில் கட்டப்பட்டு “முத்துமாரி” என்ற பெயர் சாற்றி ஊரால் வழிபடலாயினர். ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு இக்கோயில் வழிபாடு தொடங்கியது. அன்று தொடக்கம் இன்றுவரை பொங்கவிடுவதும் நீர்கஞ்சி வார்ப்பதும் நடைபெற்று வருகிறது.
பின்னர் கர்ப்பக்கிரக அமைப்புடன் கட்டடநிலையில் கோயில் திராவிட சிற்பக்கலை மரபில் கட்டப்பட்டது. 15 நாள் உற்சவம் நிர்ணயிக்கப்பட்டது. 1947 ல் தர்சன மண்டபம் வசந்த மண்டபம் என்பன அமைக்கப்பட்டன. 1995 ல் வாகனமும் சப்பரமும் செய்யப்பட்டன. தற்போது அன்னதானமடம், கல்யாணமண்டபம் எனவும் அமைக்கப்பட்டுச் சித்திரத்தேரும் செய்யப்பட்டுள்ளது.
ஓர் ஆண்டில் அரைவாசி நாட்கள் விசேட பூசை நாட்களாக மக்கள் ஒன்று கூடி வழிபடும் நாட்களாக இருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பு. 52 செவ்வாய்த்தினங்கள் இவற்றுள் குறிப்பிடத்தக்கவை. காவடி, கரகம், பாற்செம்பு என நேர்த்திக்கடன் நிறைவேற்றும் பக்தர் கூட்டம் என்றும் அலைமேதும். கோயிலின் சித்திரத்தேர் வெள்ளோட்டச்சிறப்புமலர் 2001 ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. வெறும் இலந்தைக்காட்டில் கொட்டிலில் குடியேறிய முத்துமாரி இன்று இராஐகோபுரத்துடன் கோடிக்கணக்கான பக்தர் வந்து கூடும் கோயிலிலே உறைகின்றாள்.
Tuesday, July 24, 2018
Subscribe to:
Posts (Atom)